வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

விநாயகர்!!!

விநாயகர்!!!

விநாயகர்!!!

பிள்ளையார் என்பது ஏன்?
தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம்.
ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம்.
சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

கணபதிக்கு பிரியமானவை!
கணபதிக்கு பிரியமான 21:
கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் 21:
புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21:
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.
இலைகள் 21:
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.
நிவேதனப் பொருட்கள் 21:
மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.
விநாயகர் துதி:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே
————————-
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா…
————————-
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்
மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது –
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை
யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள்.
புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது.
பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.
அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.
பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர்.
இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!
விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!
கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!
பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!
ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!
என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!
தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!
எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.
உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.
பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.
விரதம்:
மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும்.
உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.
மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும்.
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும்.
பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்பு:
விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.
சூரியன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததுள்ளது
விநாயகருக்கு அறுகும் வன்னிப் பத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மருது, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.
கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.
அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.
தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.
இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.
அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.
வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.
விநாயகரின் 32 வடிவங்கள்:
1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.
கோபுர கணபதி:
கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர்.
சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
எதிர்நோக்கும் கணபதி:
சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர்.
இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.
கொடிமர கணபதி :
கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர்.
இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார்.
பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர்.
இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர்.
முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.
கன்னிமூலை கணபதி:
பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம்.
அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார்.
இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.
துவார கணபதி:
ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர்.
தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர்.
மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
விமான கணபதி:
ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.
விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
இருப்பிடம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் – காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.
உப்பூர் வெயிலுகந்த விநாயகர்!
உப்பூர் சத்திரம் எனும் கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. சேதுகடற்கரை சாலை என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
கடற்கரை அருகே அமைந்த இந்த கிராமம் வடமொழியில் லவணபுரம் என வழங்கப்பட்டது. லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது.
சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் வன்னிமந்தார வனம் எனவும் அழைக்கப்பட்டது.
ராமனுக்கு ஆசி:
ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ராமன் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி கீழக்கடற்கரை அருகே உள்ள வன்னிவனத்தை அடைந்தார்.
அமைதியான சூழலில் கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். விநாயகரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு சேதுக்கரை நோக்கி பயணமானார்.
கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார்.
1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
இருப்பிடம் :
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்தில் சேதுகடற்கரை சாலையில் உப்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.
பசுவண்ணன் (சித்தி விநாயகர்)
கோவில்களில் ஒரு வித்தியாசமான கோவில் இது.  முகப்பில் விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், நந்தி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் என சுதை சிற்பங்களின் அணிவகுப்பு.
பசுவண்ணன் கோவில் என்றால் வேணுகோபால சுவாமி கோவிலாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. நந்தியம் பெருமாள் நுழைவுவாயில் நேர் மேலே இருப்பதால் சிவாலயமாகக்கூட இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
கோவிலில் நுழைந்து மூலவரைப் பார்த்த பின் தான் நமது எண்ணங்கள் அனைத்துமே தவறு என்பதை உணர முடிகிறது. பசுவண்ணன் எனும் திருநாமத்தில் அருள்பாலிக்கும் இறைவன் விநாயகப் பெருமான் ஆவார்.
அர்த்த மண்டபத்தில் சிவலிங்கமும் வாகனமாகிய நந்தியம் பெருமானும் அருளுகின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
இச்சந்நிதியின் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் விநாயகர், நாகம், சிவன் ஆகிய திருமேனிகள் உள்ளன.
தினசரி காலை 8.30, 10.30, மாலை 6.30 என மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது.  1920ஆம் ஆண்டில் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்ட சக்கரத்துடன் கூடிய மணி, கட்டிட அமைப்பு ஆகியன கோவில் பழமையை உறுதி செய்கின்றன.
இருப்பிடம் :
கோவை ரயில் நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ, தூரத்திலுள்ள சுக்கிரவாரப் பேட்டையில் கோயில் அமைந்துள்ளது. (தடம் எண் 1சி, 21, 58, 64, 34).
விநாயகர் 108 போற்றி ….
 ஓம் எனும் பொருளாய் உள்ளோய்  போற்றி
     ஒம் பூமனம் பொருள்  தொறும் பொலிவாய் போற்றி
              ஓம்  அகரம்  முதலென  ஆனாய் போற்றி
    ஓம் அகர உகர ஆதி  போற்றி
                ஓம்   மகரமாய் நின்ற  வானவ போற்றி
     ஓம் பகர் முன்னவனாம் பரனே  போற்றி                              6
             ஓம் மண்ணாய்  விண்ணாய் மலர்ந்தாய் போற்றி
      ஓம்  கண்ணுள்  மணியாய்  கலந்தாய் போற்றி
              ஓம்  நீர்தீக்  காற்றாய் நின்றாய்  போற்றி
       ஓம்   கார்குளிராக  கனிந்தாய் போற்றி
              ஓம் பகலவன்  நிலவாய்  பரந்தாய்  போற்றி
       ஓம்  நிகர்மீன்  கணமாய் நிலைத்தாய்   போற்றி                12
               ஓம் மழைபொழி  இமய வல்லிசேய்  போற்றி
      ஓம்  தழைசெவி  எண்தோள்  தலைவ  போற்றி
               ஓம் திங்கட்  சடையோன்  செல்வ   போற்றி
     ஓம் எங்களுக்கு  அருளும்  இறைவா  போற்றி
               ஓம் ஆறுமுகச்  செவ்வேட்க்கு  அண்ணா  போற்றி
      ஓம் சிறுகண்  களிற்றுத் திருமுக  போற்றி                             18
               ஓம்  செம்பொன்  மேனிச்  செம்மால்   போற்றி
    ஓம்  உம்பர்  போற்றும் உம்பல்  போற்றி
               ஓம் பண்ணியம்  ஏந்துகைப்  பண்ணவ  போற்றி
    ஓம்  எண்ணிய  எண்ணியாங்கு  இசைப்பாய்  போற்றி
              ஓம் அப்பமும்  அவலும்  கப்புவாய்  போற்றி
    ஓம் முப்புரி  நூல்மார்பு  அப்பா போற்றி                                       24
             ஓம்  எள்ளுருண்டை  பொறி ஏற்பாய்  போற்றி
     ஓம் தெள்ளறு  தெவிட்டாத்   தேனே  போற்றி
             ஓம்  மூவர்  மொழியிடம்  மொழிந்தாய்  போற்றி
      ஓம் தேவர்க்கு  அரிய தேவா போற்றி
              ஓம்  மாலுக்கு  அருளிய  மதகரி  போற்றி
      ஓம் பாலெனக்  கடல்நீர்  பருகினாய்  போற்றி                         30
              ஓம்  பாரதம் எழுதிய  பருஉக்கர  போற்றி
       ஓம் மா ரதம்  அச்சொடி  மதவலி  போற்றி
              ஓம் மாங்கனி  அரன்பால்  வாங்கினோய்  போற்றி
       ஓம் ஈங்கினி  எம்பால்  எழுந்தருள்  போற்றி
               ஓம்  கரும்பு  ஆயிரம்கொள்  கள்வா  போற்றி
        ஓம் அரும்பொருளே  எம்  ஐயா போற்றி                                   36
                ஓம்  திணைபால்  கடந்த  தேவே  போற்றி
       ஓம்  புணையாய்  இடர்க்கடல்  போக்குவாய்  போற்றி
               ஓம் பேழை  வயிற்றுப்  பெம்மான்  போற்றி
       ஓம்  ஏழைக்கு  இரங்கும்  எம் இறை  போற்றி
              ஓம்  அடியவர்  உள்ளம்  அமர்ந்தாய் போற்றி
       ஓம்  அடிமலர்  எம்தலை  அணிவாய் போற்றி                         42
             ஓம்  திருநீற்று  ஒளிசேர்  செம்மால் போற்றி
      ஓம்   இரு வேறு  உருவ  ஈசா  போற்றி
               ஓம்  உள்ளத்து  இருளை  ஒழிப்பாய்  போற்றி
      ஓம்  கள்ளப்  புலனைக்  கரைப்பாய்  போற்றி
               ஓம்  நம்பியாண்டார்க்கு  அருள்  நல்லாய்  போற்றி
     ஓம்  எம்பிரானாக  இனிதே  இசைந்தாய்  போற்றி                                        48
              ஓம்  உருகுவோர்  உள்ளத்து  ஒளியே  போற்றி
    ஓம்  பெருகு  அருள்  சுரக்கும்  பெருமான்  போற்றி
              ஓம்  தம்பிக்கு  வள்ளியைத்  தந்தாய்  போற்றி
   ஓம்   உம்பர்கட்கு  அரசே  ஒருவ  போற்றி
              ஓம்   பிள்ளையார்ப்  பெயர்கொண்டு  உள்ளாய்  போற்றி
    ஓம்  வள்ளலாய்  நலன்கள்  வழங்குவாய் போற்றி                       54
             ஓம் மூவாச் சாவா  முத்தா போற்றி
    ஓம்  ஆவா  எங்களுக்கு  அருள்வாய்  போற்றி
            ஓம் தமிழ்ச்சுவை  சார்திருச் செவியோய்  போற்றி
    ஓம் அமிழ்தாய்  எம்மகத்து  ஆனாய்  போற்றி
           ஓம்  மழவிளங்களிரே  மணியே  போற்றி
    ஓம்   குழவியாய்  சிவன்மடி  குலவுவோய்   போற்றி                    60
           ஓம் பெருச்சாளியூரும்  பிரானே போற்றி
    ஓம்  நரிச் செயலார்பால்  நண்ணாய்  போற்றி
           ஓம்  செந்தாமரைத்  தாள்  தேவா  போற்றி
    ஓம் நந்தா மணியே நாயக  போற்றி
            ஓம் இருள்சேர்  இருவினை  எறிவாய் போற்றி
    ஓம்  கரிமுகத்து  எந்தாய் காப்போய்  போற்றி                                 66
           ஓம்  ஆங்காரம்முளை  அறுப்பாய்  போற்றி
   ஓம்  பாங்கார்  இன்பப்  பராபர  போற்றி
           ஒம் கற்றவர் விழுங்கும்  கனியே  போற்றி
    ஓம்   மற்றவர் காணா  மலையே  போற்றி
           ஓம்  சொல்லொடு  பொருளின்  தொடர்பே  போற்றி
    ஓம்  கல்லும்  கரைக்க  வல்லோய்  போற்றி                                  72
           ஓம் தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி
   ஒம் முந்திய பொருட்கும்  முந்தியோய்  போற்றி
          ஓம் ஐந்து கை உடைய  ஐய  போற்றி
  ஓம்  ஐந்தொழில்  ஆற்றும்  அமர  போற்றி
          ஓம் அருளாய்  அருள்வாய்  ஆண்டவ  போற்றி
  ஓம்  தருவாய்  மணமலர்த் தாராய்  போற்றி                                 78
         ஓம்  கயமுக அசுரனைக் காய்ந்தாய்  போற்றி
 ஓம்  மயலரும்  இன்ப  வாழ்வே  போற்றி
         ஓம்  ஆனையாய்  புழுவாய்  ஆனாய்  போற்றி
 ஒம் பானை  வயிறறுப் பரமே  போற்றி
         ஓம்  கடம்பொழி  யானைக் கன்றே  போற்றி
 ஓம்  மடம்ஒழி  அறிவின் வளனே போற்றி                                      84
         ஓம் பாலொடு  தேனும்  பருகுவோய் போற்றி
 ஓம்  மேலோட கீழாய்  மிளிர்வோய்  போற்றி
         ஓம்  எய்ப்பில் வைப்பாய்  இருந்தோய்  போற்றி
 ஓம் மெய்ப்பொருள் வேழ  முகத்தான்  போற்றி
         ஓம்  நல்லார்க்கு  எட்டும்  நாதா  போற்றி
  ஓம்  பொல்லா  மணியே  புராதன  போற்றி                                     90
         ஓம்  அறிவின்  வரம்பில்  அகன்றாய்  போற்றி
  ஓம் குறிகுணம்  கடந்த குன்றே  போற்றி
          ஓம்  எட்டு வான்குணத்து எந்தாய் போற்றி
  ஓம்  கட்டறு  களிற்று  முகத்தோய்  போற்றி
          ஓம்  மலரில்  மணமாய்  வளர்ந்தாய்  போற்றி
  ஓம்  அலர் கதிர் ஒளியில்  அமர்வோய்  போற்றி                           96
           ஓம் ஓங்காரம்  முகத்து  ஒருத்தல்  போற்றி
  ஓம்  ஏங்காது  உயிர்க்கு  அருள் இயற்கை போற்றி
          ஓம் எண்ணும் எழுத்துமாய்  இசைந்தாய்  போற்றி
  ஓம்  பண்ணும்  பயனுமாய்  பரந்தாய்  போற்றி
         ஓம் அருவே  உருவே  அருஉரு  போற்றி
  ஓம்  பொருளே  பொருளின்  புணர்ப்பே  போற்றி                             102
          ஓம் புகர்முகக்  களிற்றுப்  புண்ணிய  போற்றி
 ஓம்  அகலிடம்  நிறைய  அமர்ந்தோய்  போற்றி
          ஓம்  செல்வம் அருள்க  தேவா போற்றி
 ஓம்  நல்லன  எமக்கருள்  நாயக  போற்றி
         ஓம் ஆக்கமும்  ஊக்கமும்  அருள்வாய்  போற்றி
 ஓம்  காக்க எங்களை  உன்  கழலினைப்   போற்றியே  ….               108

வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம்.
இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம்.
மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

No comments:

Post a Comment